'இன்போஸிஸ் இன்னும் ஸ்டெடியாகலையே... உங்க ஷேரை வந்த விலைக்கு வித்துடுங்க'
மும்பை: நாராயண மூர்த்தி இன்போஸிஸ் தலைவராக மீண்டும் வந்த பிறகும் இன்போஸிஸ் இன்னும் பழைய வலுவான நிலைக்குத் திரும்பவில்லை, என்ற பேச்சு நிலவ ஆரம்பித்துவிட்டது.
மேலும் மூத்த அதிகாரிகள் விலகிக் கொண்டிருப்பதால் இந்த நிறுவனப் பங்குகளை குறைத்து மதிப்பிட்டுள்ளனர் பங்குச் சந்தை நிபுணர்கள்.
இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, மீண்டும் தலைவராக வந்த பிறகு, முதல் காலாண்டில் ஓரளவு நல்ல லாபத்தை ஈட்டியது இன்போஸிஸ். ஆனால் அது அவரது தலைமையால் அல்ல. முன்பிருந்த நிர்வாகமே அதற்குக் காரணமாக இருந்தது. பங்குகள் விலையும் உயர்ந்தது.
ஆனால் நாராயண மூர்த்தி வந்தபிறகு நிறுவன மூத்த அதிகாரிகள் வரிசையாக விலக ஆரம்பித்தனர்.
சமீபத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், அமெரிக்க பிரிவின் தலைவருமான அசோக் வெமூரி விலகினார். இவர்தான் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரே இன்போஸிஸை விட்டு விலகியது பலருக்கும் அதிர்ச்சி!
வெமூரியைத் தொடர்ந்து, இன்போஸிஸின் விற்பனைப் பிரிவு தலைவர் பஸப் பிரதானும், வட அமெரிக்கப் பிரிவின் நிதித்துறை தலைவர் சுதிர் சதுர்வேதியும் வெளியேறிவிட்டனர்.
அசோக் வெமூரிக்கு முன் இன்போஸிஸ் துணைத் தலைவர் ஷாஜி பரூக், அமெரிக்கப் பிரிவின் நிதித் துறைத் தலைவர் பாலாஜி யெல்லவள்ளி ஆகியோர் விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சமீப கால நிகழ்வுகளால், இன்போஸிஸ் ஒரு ஸ்திரத்தன்மையில் இல்லாதது போன்ற தோற்றம் ஐடி துறையில் உருவாகியுள்ளது.
"நாராயண மூர்த்தி மீண்டும் இன்போஸிஸ் தலைவரானதும், நிறுவனம் தனது பழைய வலுவான நிலைக்குத் திரும்பிவிடும் என்றுதான் பலரும் நம்பினர். ஆனால் அது தவறு என்று தெரிகிறது. இத்தனை காலமும் இன்போஸிஸுக்கு பலமாய் திகழ்ந்த பல சீனியர் நிர்வாகிகள் நிறுவனத்திலிருந்து வெளியேறியிருப்பது, இன்னும் இன்போஸிஸ் தள்ளாட்டத்திலிருப்பதையே காட்டுகிறது," என பங்கு வர்த்தக தளமான நிர்மல்பங்க் தெரிவித்துள்ளது.
மேலும் இன்போஸிஸ் பங்குகளின் நடப்பு மதிப்பை குறைத்து மதிப்பிட்டுள்ள நிர்மல் பங்க், இவற்றை வைத்திருப்பதை விட, ரூ 2860-க்கு விற்கலாம் என பரிந்துரைத்து, பங்குதாரர்களுக்கு ஷாக் தந்துள்ளது.
இன்போஸிஸ் பங்கு ஒன்றின் இப்போதைய மதிப்பு ரூ 3105.