சிறையில் 5 நாட்களாக ஜெகன் உண்ணாவிரதம்! உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றம்!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25-ந் தேதி அன்று சிறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் அவர். தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதைத் தொடர்ந்து ஜெகன்மோகனை மருத்துவர்கள் குழு பரிசோதித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஜெகன் போராட்டத்தைக் கைவிட மறுக்கவே அவர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெகன் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.