இந்தியாவின் முதல் ராணுவ-உளவு செயற்கைக் கோள் 'ஜிசாட்-7' விண்ணில் ஏவப்பட்டது!
பெங்களூர்: இந்திய ராணுவத்துக்காக, குறிப்பாக கடற்படைக்காக உருவாக்கப்பட்ட முதல் பாதுகாப்பு- உளவு செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முதலாக ஜிசாட்7 என்ற செயற்கைக்கோள் இந்தியக் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
கடற்படை, தங்களுக்கென தனியானக ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டுமென்று கருதியதால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்தப் புதிய உளவு, கடல் பகுதி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
இந்த செயற்கைக் கோள் தென் அமெரிக்காவில் சுரீனாம் நாட்டுக்கு அருகே உள்ள பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஐரோப்பாவின் ஏரியன்-5 என்ற ராக்கெட் மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய பாதுகாப்பு பணிக்காக அர்ப்பணிக்கப்படும் முதல் செயற்கைக்கோளை, ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன் ஸ்பேசின் ஏரியன் 5 என்ற ராக்கெட் விண்ணிற்கு சுமந்து சென்றது.இந்த விண்கலத்தின் அலைவரிசைகள் இந்திய கடற்படைக்குரிய தகவல் தொடர்புடன் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அனைத்தும் இந்த விண்கலத்தின் கண்காணிப்பின் கீழ் வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தகவல் அடிப்படைக்கு இது முக்கிய பங்கு வகிக்கும்.
சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிக்கும்.