கொல்கத்தா சாந்தினி சவுக் மார்க்கெட்டில் 'பாக்ஸ் குண்டு' வெடித்தது: பதட்டம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் மார்க்கெட்டில் இன்று மதியம் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் மார்க்கெட் பகுதியில் இன்று மதியம் குண்டு வெடித்தது. அவ்வளவாக சக்தி இல்லாத குண்டாக இருந்ததால் உயிர் இழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
மத்திய அவென்யூ மற்றும் மதன் தெருவுக்கு இடையே ஒரு பாக்ஸ் கிடந்தது. அதில் இருந்த குண்டு தான் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் மேலும் ஏதாவது குண்டு வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடிக்காமல் இருந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் சற்று நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று போலீசார் தெரிவித்தனர்.