பிரமாதமாக 'ஸ்கெட்ச்' போட்டு பத்கலை மடக்கிப் பிடித்த 'ஐபி'!
டெல்லி: இந்தியன்முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை, மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு அழகாக மடக்கிப் பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான தீவிரவாத நபர் யாசின் பத்கல். அவரை நேபாளத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளது ஐபி.
நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி.
இந்த அதிரடி வேட்டையில் நேபாள போலீஸாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் போலீஸாரும் கூட இணைந்து செயல்பட்டுள்ளனர்.
சரி ஐபி எப்படி பிளான் போட்டு பத்கலை தூக்கியது என்ற விவரத்தைப் பார்ப்போம்....
ஒரு வார உழைப்பு
கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது.
ரகசிய வீடு கண்டுபிடிப்பு
பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் அவன் தப்பி விடாத வகையில் மடக்கிப் பிடிக்கும் திட்டங்களை மிகத் துல்லியமாக தீட்டினர்.
அதிரடியாக கைது
அதன் பின்னர் பீகார் போலீஸ், தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள போலீஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர்.
மோத்திஹரியில் வைத்து விசாரணை
அதன் பின்னர் அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது புனேவில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு, மும்பையில் 2012ல் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குத் தானே காரணம் என்பதை பத்கல் ஒத்துக் கொண்டானாம்.
புத்தகயா குண்டுவெடிப்பில் தொடர்பில்லை
ஆனால் சமீபத்தில் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று பத்கல் தெரிவித்துள்ளானாம்.
இன்று டெல்லி கொண்டு வருகிறார்கள்
பத்கலை இன்று டெல்லிக்குக் கொண்டு வருகிறார்கள். சாலை மார்க்கமாகவோ அல்லது வேறு மார்க்கமாகவோ வராமல் சிறப்பு விமானத்தில் பத்கல் கொண்டு வரப்படக் கூடும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானுடன் தொடர்பு எப்படி...
பத்கலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து அவனிடம் முக்கியமாக விசாரிக்கப்படவுள்ளது. பாகிஸ்தான்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு நிதியுதவி அளிப்பதாக பாதுகாப்புப் படையினர் திடமாக நம்புகின்றனர்.
முக்கியத் துப்பு... போன் நம்பருடன்
பத்கல் பதுங்கியுள்ள இடம் குறித்தும், பத்கலின் தொலைபேசி எண்ணும் ஒரு முக்கிய துப்பு மூலம் தங்களுக்குக் கிடைத்ததாக ஐபி கூறுகிறது.
சில வாரங்களாகவே ஒட்டுக் கேட்பு
இதையடுத்து பத்கலின் தொலைபேசி தொடர்புகளை கடந்த சில வாரமாகவே ஐபி குழுவினர் ஒட்டுக் கேட்டு வந்தனராம். மேலும் பத்கல் தொடர்பாக நேபாள காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பொகாரா இல்லம்
பொகாரா இல்லத்தில் பத்கலுடன் அவனது வலது கரமாக கருதப்படம் ஹட்டி என்கிற அசதுல்லா அக்தர் என்பவனும் தங்கியுள்ளான். அவனும் கைது செய்யப்பட்டுள்ளான். இது எதிர்பாராத கைது என்றும் கிட்டத்தட்ட போனஸ் போல என்றும் அதிகாரிகள் வர்ணிக்கின்றனர்.
மும்பை - புனே தவிர
மும்பை, புனே குண்டுவெடிப்புகள் தவிர மேலும் பல இடங்களில் பத்கல் குண்டுவெடிப்புகளை நடத்தியிருக்கலாம் என்று புலனாய்வுப் பிரிவினர் நம்புகின்றனர். அதுகுறித்தும் பத்கலிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்து.
நேபாள - பீகார் எல்லையில் வைத்து ஒப்படைப்பு
கைது செய்யப்பட்ட பத்கலை, நேபாளப் படையினர், நேபாள் - பீகார் எல்லையில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
சிக்கிய லேப்டாப்புகள்
பத்கலிடமிருந்து 2 லேப்டாப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரிடம் விளக்கிய ஐபி தலைவர் இப்ராகிம்
பத்கல் கைது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஐபி தலைவர் சையத் ஆசிப் இப்ராகிம் விளக்கினார். அவரே நேரடியாக இந்த ஆபரேஷனை கண்காணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.