என்கவுண்ட்டர்ல போட்டுருவாங்களோன்னு பயந்தோம், நல்ல வேளை: பட்கல் தந்தை
மங்களூர்: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதால் அவனது குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தேசிய புலனாய்வு துறையினரால் இந்திய-நேபாள எல்லையில் நேற்று கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில் இது குறித்து அவனது தந்தை ஜரார் சித்திபாபா கூறுகையில்,
அகமது சித்திபாபா(யாசின் பட்கல்) கைது செய்யப்படத்தில் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம். அவன் இறந்துவிட்டான் என்றே இத்தனை நாட்கள் நினைத்தோம். என் மகன் அப்பாவி. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். அவன் மீது குற்றம் இருந்தால் தண்டிக்கட்டும்.
கடந்த 2005ம் ஆண்டு என் மகன் என்னுடன் துபாய் வந்து ஒரு கடை வைக்க உதவினான். அதன் பிறகு 2007ம் ஆண்டு காணாமல் போனான். இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். யாசின் என்ற பெயரை போலீசாரும், ஊடகங்களும் அவனுக்கு வைத்துள்ளன என்றார்.
அவனது உறவினர் யாகூப் கூறுகையில்,
அகமதை பற்றி பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அகமது 1983ம் ஆண்டு பிறந்தான். அவன் 1ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை பட்கலில் படித்தான். ஆனால் அவனால் எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அவன் துபாயில் இருந்து மாயமானது வரை புனே பக்கமே சென்றதில்லை என்றார்.