ஒரு கையால் சுவாமி சிலை செய்யும் தன்னம்பிக்கை மனிதர்..
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் இளைஞர் பாண்டி.
மானாமதுரையில் வேளார்கள் எனப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைவினை கலைஞர்களான இவர்கள் சீசனுக்கு ஏற்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வார்கள்.
மண்பாண்ட தொழிலாளாரான பாண்டிக்கு 21 வயதாகிறது. ஒரு சிறு விபத்தில் ஒரு கையை பறிகொடுத்தார். பள்ளியில் சிறுவர்கள் கேலி செய்யவே படிப்பை பாதியில் நிறுத்தினார்.
குடும்பத் தொழிலான மண் பாண்ட தொழிலையே தந்தை உதவியுடன் கற்றுக் கொண்டார். பானைகள், சிறுசிறு சுவாமி சிலைகளை செய்து தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு அடி முதல் 6 அடி விநாயகர் சிலை வரை செய்கிறார். சுவாமி சிலைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது கிடையாது என்பது இவரின் தனிச்சிறப்பு. ஆர்டர் கொடுப்பவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்கிறார்.
இவருக்கு பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் இருந்துதான் அதிகளவில் ஆர்டர் வருகிறது. விநாயகர் சிலை பணி குறித்து பாண்டி கூறும்போது சுந்தரநடப்பு, செய்களத்தூர் உள்ளிட்ட கிராம கண்மாய்களில் மண் அள்ளி வந்து சிலைகள் செய்கிறோம், இந்த மண்ணில்தான் இரும்புச் சத்து உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு மணல் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆண்டாண்டு காலமாக நாங்கள் கண்மாய்களில் மணல் எடுத்து கைவினை பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். தற்போது தடையால் மண் கிடைப்பது சிரமமாகி விட்டது. இதனால் ஒரு மாட்டு வண்டி மணல் 75ரூபாயில் இருந்து தடைமயால் 400ரூபாயாக உயர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் அரசே மேல்முறையீடு செய்து ஒராண்டிற்கு தடை வாங்கியுள்ளது. அதுபோல தமிழக அரசும் மனது வைத்து எங்களுக்கு கண்மாய்களில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றார்.