சிங்கள ரவுடி அமைச்சரின் 'திருமண பேச்சு'.. நவநீதம் பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டது இலங்கை!
கொழும்பு: இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று சிங்கள ரவுடி அமைச்சரான மேர்வின் சில்வா திமிராக பேசியதற்கு இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆய்வு செய்ய நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. குழுவினர் இலங்கையில் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிங்கள ரவுடி அமைச்சரான மேர்வின் சில்வா, நவநீதம் பிள்ளையை தாம் திருமணம் செய்து கொண்டு இலங்கை முழுவதும் சுற்றிக் காண்பிக்க தயார் என்று நக்கலடித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சியை ஐ.நா அதிகாரிகள் நவநீதம்பிள்ளைக்கு போட்டுக் காண்பித்தனர். இதைப் பார்த்தவுடன் அவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, இலங்கையிடம் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை ஹில்டன் விடுதியில் நடந்த வரவேற்பு நிகழ்வில், மேர்வின் சில்வாவின் கருத்துக்காக இலங்கை அரசின் சார்பாக அந்நாட்டின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வருத்தம் தெரிவித்தார்.