சர்வாதிகார பாதையில் இலங்கை செல்வதற்கு அறிகுறிகள்..: நவநீதம் பிள்ளை சாடல்!
கொழும்பு: இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடுமையாக சாடியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து கடந்த ஒரு வாரகாலமாக ஆய்வு மேற்கொண்ட நவநீதம் பிள்ளை இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை சர்வாதிகார பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் பலரும் இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். தகவல் அறியும் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுபடுத்த வேண்டும்.
காணாமல் போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் தருகிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றார்.