வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் உடனே டிஸ்மிஸ்!!
சென்னை: ரவுடிகள் போல அடிதடி வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை உடனடியாக கல்லூரியை விட்டு நீக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை யோசனை அளித்துள்ளது. இதற்கு அனைத்து கல்லூரி முதல்வர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, பச்சையப்பா கல்லூரி, நந்தனம் கல்லூரி, நியூ கல்லூரி மாணவர்கள் திடீர், திடீரென உருட்டுக் கட்டைகளுடன் ரோட்டுக்கு வந்து ரவுடிகள் போல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அரசு பேருந்துகள் சேதமடைகின்றன. பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இவர்களை கட்டுப்படுத்த கல்லூரி முதல்வர்கள் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல், கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் பங்கேற்று வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு யோசனை வழங்கினர். இதை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அடிக்கடி மோதல்
மாணவர்களை படிப்பதற்காகத்தான் பெற்றோர்கள் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஜாலிக்காக அல்ல.
இளமைப் பருவம் என்பதால் சில குறும்புத் தனம் இருக்கத் தான் செய்யும். அது அளவாகத்தான் இருக்க வேண்டும் என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.
ஆனால் சில மாணவர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே மோதல் உருவாகிறது.
நந்தானம் கல்லூரி
கடந்த மாதம் 27-ந்தேதி நந்தனம் கல்லூரி மாணவர்களும், நியூ கல்லூரி மாணவர்களும் தடியுடன் திரண்டு மோதிக் கொண்டனர். இதே போல் தியாகராய கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதுடன் பஸ் கண்டக்டரையும் தாக்கி உள்ளனர்.
சத்யபாமா கல்லூரி
சத்யபாமா கல்லூரி மாணவர்கள் கடந்த 2-ந் தேதி இரு பிரிவாக மோதிக் கொண்டனர். இப்படி மாணவர்கள் மோதிக் கொள்ளும் போது ரத்தக் களறி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை நடக்கிறது.
பிரசிடென்சி கல்லூரி
பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பச்சையப்பா கல்லூரி மாணவர்களுடன் மோதிக்கொள்கின்றனர். கடந்த 14-ந் தேதி இரு பிரிவாக மோதிய மாணவர்கள் பஸ்சையும் அடித்து நொறுக்கி விட்டனர். இதை தவிர்க்கத்தான் மோதலில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.
‘பஸ் டே’ தடை
பஸ் தினம் கொண்டாட கோர்ட்டு தடை விதித்த சூழலில் இவர்கள் அதையும் மீறி பஸ் தினம் கொண்டாடி வன்முறையாக மாற்றுகிறார்கள். இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்
முதல்வர்கள் விளக்கம்
போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நியூ கல்லூரி பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் கல்லூரி, குருநானக் கல்லூரி, பச்சையப்பா கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரி மாணவர்களில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விளக்கி கூறினர்.
உடனடி நடவடிக்கை
இதைத் தொடர்ந்து பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 3 பேர் வன்முறையில் ஈடுபட்ட காரணத்திற்காக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இதே நடவடிக்கை நந்தனம் கல்லூரியிலும் எடுக்கப்பட்டது.
கண்காணிப்பு நடவடிக்கை
கல்லூரி மாணவர்கள் போர்வையில் இருந்து கொண்டு அடிக்கடி வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க ஏற்கனவே சிறப்பு மாணவர் படை ஒன்றை போலீசார் அமைத்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் 29 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்களின் பின்னணி, உறவினர்கள் குறித்து விசாரணை செய்து உடனடியாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.