16 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் நள்ளிரவில் சாமியார் அஸரம் பாபு கைது
இந்தூர்: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், சாமியார் அஸரம் பாபுவை இந்தூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
இந்தூரில் உள்ள அவரது ஆசிரமத்திற்குச் சென்று போலீஸார் அஸரம் பாபுவைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முன்னதாக சாமியாரைக் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
வாரமாக இழுபறி
ஆகஸ்ட் 20ம் தேதி ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் வைத்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார் அஸரம் பாபு என்று 16 வயது சிறுமி புகார் கிளப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.
அஸரம் பாபு மறுப்பு
ஆனால் இந்த புகாரை அஸரம் பாபு மறுத்தார். அந்தப் பெண்ணுக்கு மன நிலை பிறண்டு விட்டது. அவர் கூறுவது அபாண்டம் என்று அவர் கூறினார். மேலும், இந்த புகாரின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கைது செய்ய போலீஸ் முடிவு
இருப்பினும் சிறுமியின் புகாரின் பேரில் அஸரம் பாபுவைக் கைது செய்ய ஜோத்பூர் போலீஸார் முடிவு செய்தனர்.
இந்தூர் விரைந்த போலீஸ் குழு
இதையடுத்து இந்தூருக்கு விரைந்து வந்தது போலீஸ் படை. அங்கு தங்கியிருந்த அஸரம் பாபுவைக் கைது செய்ய நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆதரவாளர்கள் போராட்டம்
ஆனால் அஸரம் பாபுவைக் கைது செய்ய விடாமல் போலீஸாரைத் தடுத்து அவரது ஆசிரமம் முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டனர்.
அஸரம் பாபு கைது
இதைத் தொடர்ந்து நள்ளிரவுவாக்கில் அஸரம் பாபுவை போலீஸார் கைது செய்தனர்.
ஜோத்பூருக்கு
உடனடியாக அவரை இந்தூர் விமான நிலையத்திற்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர். இன்று பிற்பகலில் அவர் ஜோத்பூர் கொண்டு செல்லப்படுகிறார்.
ராத்திரி முழுவதும் விமான நிலையத்தில்
நேற்று இரவு முழுவதும் இந்தூர் விமான நிலையத்திலேயே கழித்தார் அஸரம் பாபு.
விசாரணைக்கு தகுதியான உடல்நிலை
முன்னதாக அஸரம் பாபுவை விசாரிப்பதற்கு ஏற்ற வகையில் அவரது உடல் நிலை இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் அறிவித்தனர். அஸரம் பாபுவுக்கு 75 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.