பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.35, டீசல் 50 பைசா உயர்ந்தது.. நள்ளிரவு முதல் அமல்
டெல்லி: இரண்டே மாதங்களில் 6வது முறையாக பெட்ரோல் விலையையும், 8 மாதங்கலளில் 8வது முறையாக டீசல் விலையையும் உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.35ம், டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 3 உயர்ந்துள்ளது.
அடுத்த மாதம் காஸ் விலையும் உயரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
சனிக்கிழமை நள்ளிரவு முதல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் ரூ. 3 உயர்ந்தது
பெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்துள்ளது. டீசல் விலையானது லிட்டருக்கு 61 காசுகள் உயர்ந்துள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.48
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ. 77.48 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 55.37 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் ரூ. 2.83 உயர்வு
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 2.83 உயர்ந்து லிட்டர் பெட்ரோல் ரூ. 74.10க்கு விற்கிறது. மும்பையில் ரூ. 81.57 ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்திலிருந்து இதுவரை ரூ. 9.17 உயர்வு
கடந்த ஜூன் மாதம் முதலே பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இதுவரை ரூ. 9.17 அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
2 வாரங்களுக்கு ஒருமுறை
பெட்ரோல் விலையை 2 வாரங்களுக்கு ஒருமுறை பரிசீலித்து உயர்த்தும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவை உயர்த்தி வருகின்றன. 2010ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கை இருந்து வருகிறது.
விலை வாசி உயரும்
டீசல் விலை அதிகரித்துள்ளதால் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் உயரும். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.
நிலைமை மேலும் மோசமாகும்
ஏற்கனவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மீண்டும் உயரும்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.