அதெப்படி மொய்லி ராத்திரி 8 மணியோட பெட்ரோல் பங்குகளை மூட முடியும்.. பிரதமர் அலுவலகம் டென்ஷன்
டெல்லி: பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் இரவு 8 மணியுடன் பெட்ரோல் பங்குகளை மூ்டி விடலாம் என்று முட்டாள்தனமான யோசனை பிரதமர் அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை உடனடியாக நிராகரித்து விட்டதாம் பிரதமர் அலுவலகம்.
பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லிதான் இந்த விளக்கெண்ணெய் ஐடியாவை பிரதமர் அலுவலகத்திற்குக் கொடுத்துள்ளாராம்.
ஆனால் இது சாத்தியப்படாது என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக கூறி ஆரம்ப கட்டத்திலேயே இந்தயோசனையை நிராகரித்து விட்டதாம்.
ராத்திரி 8 மணிக்கு மேல 'ஆட்டோ ஓட' வேண்டாம்...
சிக்கண நடவடிக்கைகள் பலவற்றை யோசனையாக பிரதமர் அலுவலகத்திற்குத் தெரிவித்திருந்தார் மொய்லி. அதில் ஒன்று, இரவு 8 மணியுடன் பெட்ரோல் பங்குகளை மூடி விட்டால் பயன்பாடு குறையும் என்பது.
முட்டாள்தனமான ஐடியா
ஆனால் மொய்லியின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதை விட முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அரசிலிருந்தும் கூட மொய்லி கருத்தைக் கேட்டு முகச் சுளிப்பு உண்டானது.
அதாவது அது மக்கள் யோசனைதான்...!
உடனே பல்டி அடித்து விட்ட மொய்லி, இந்தப் பழியைத் தூக்கி மக்கள் மீது தற்போது போட்டுள்ளார். இது அரசின் யோசனை அல்ல. மாறாக மக்கள் மற்றும் பிறரின் கருத்துதான் என்று கூறியுள்ளார் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்.
நீங்க சொல்லுங்களேன்...!
அத்தோடு நில்லாமல், இதை விட பிரமாதமான ஐடியா வேறு ஏதாவது இருந்தால் எதிர்க்கட்சிகள் அரசிடம் கூறலாமே என்றும் குழந்தைப்பிள்ளைத்தனமாக பேசியுள்ளார்.