கோவையில் பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளநீர்... 10 வீடுகள் இடிந்தன
கோவை: கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கூடவே சூறாவளியும் கைகோர்த்துக்கொண்டது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை பெய்த கனமழை காரணமாக கொடுங்கு பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் 5 மீட்டர் தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் 2 கிராம மக்களும் தங்கள் கிராமங்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்துவதோடு மண் சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று நம்பர் 24 வீரபாண்டி ஊராட்சி தலைவர் சசிமதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புறநகரில் மழை
கோவை புறநகர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் கோவைப்புதூர், பேரூர்,பச்சாப்பாளையம், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பச்சாபாளையம் ஆவின் பால்பண்ணை அருகில் உள்ள 100 குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் மண்சுவரால் கட்டப்பட்ட 10 வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
குடிசைகள் இடிந்தன
பச்சாபாளையத்தில் மழைநீர் புகுந்த வீடுகளையும், இடிந்து விழுந்த வீடுகளையும் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் உணவுப்பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்தார்.
வெள்ளத்தில் சிக்கினர்
அதன் பின்னர் இந்திரா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது சுண்டக்காமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் அங்கு சிகிச்சை பெற வந்த 3 கர்ப்பிணிகள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும் அமைச்சர் தாமோதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர் அதிகாரிகளுடன் அங்கு விரைந்து சென்றார். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற 3 கர்ப்பிணிகளையும் அங்கிருந்து மீட்டு மதுக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி 3 கர்ப்பிணிகளும் மதுக்கரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ட்டனர்.
மேலும் அங்கு தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.