எங்களின் முக்கிய குறியே நரேந்திர மோடிதான்... பத்கல் பரபரப்புத் தகவல்
பாட்னா: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியக் குறியே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று அந்த அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் பத்கல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்திய -நேபாள எல்லையில் உள்ள கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட பத்கல் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பத்கல் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்...
மோடிதான் முக்கியக் குறி
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய இலக்கே மோடிதான்.
பெரும் பணம் சேகரிப்பு
நரேந்திர மோடியை நாங்கள் நெருங்கி விட்டால் பெருமளவில் சர்வதேச நாடுகளிலிருந்து எங்களுக்குப் பணம் குவிந்து விடும்.
2வது குறி அத்வானி
மோடிக்கு அடுத்து நாங்கள் குறி வைத்திருப்பது பாஜக மூத்த தலைவர் அத்வானியை.
மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு குவிந்த நிதி
2008ம் ஆண்டு மும்பையில் நடந்த 3 நாள் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் எங்களது அமைப்புக்கு பெருமளவில் நிதி குவிந்தது.
பீகார் தீவிரவாதி
பீகாரைச் சேர்ந்த மோனு என்ற நபருக்கு பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது அவன் இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ளான். ஆனால் அவன் தற்போது எங்கிருக்கிறான் என்பது தெரியாது. தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காகவே அவன் அனுப்பப்பட்டுள்ளான் என்று கூறியுள்ளார் பத்கல்.
பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் மோனு
மோனு, 2010ம் ஆண்டு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் ஆவான். இவன் பத்கலுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பிரிந்து விட்டான்
இருப்பினும் தற்போது மோனு, பத்கலின் நட்பு வட்டத்தில் இல்லை என்றும் இந்தியன் முஜாஹிதீனின் தனிப் பிரிவை உருவாக்கி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
மோனுவின் தந்தையிடம் விசாரணை
பத்கல் கொடுத்த தகவலை வைத்து பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள மோனுவின் வீட்டுக்கு தேசிய புலனாய்வுப் படையினர் சென்று அவனது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவனது பெற்றோரின் ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் அரசு - போலீஸ் உஷார்
மோடி குறித்து பத்கல் கொடுத்துள்ள விவரத்தைத் தொடர்ந்து குஜராத் அரசும், காவல்துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன் பெரும் தாக்குதல்
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மிகவும் மந்தமாக செயல்படுவதாக கருதும் அதன் வெளிநாட்டு நிதியுதவியாளர்கள், லோக்சபாதேர்தலுக்கு முன்பு இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.