துள்சிராம் பிரஜாபதி என்கவுண்டர் வழக்கு- மோடி ராஜினாமா செய்ய காங். கோரிக்கை
இதுதொடர்பாக ஒரு தனியார் புலனாய்வு நிருபர் ஒருவர் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ படத்தை வெளியிட்டு அதன் அடிப்படையில் மோடியின் ராஜினாமாவைக் கோரியுள்ளது காங்கிரஸ்.
இந்த வீடியோவில் அமீத் ஷாவை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்து சில முக்கிய பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருப்பது போல காட்சி உள்ளது. இந்த வீடியோவை தற்போது உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், நாட்டின் உயர்ந்த கட்சி ஒன்றின் தலைவர்கள் ஒன்று கூடி அமீத் ஷாவைக் காப்பாற்ற முயற்சிப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. நரேந்திர மோடிதான் 2002ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது உள்துறை அமைச்சராகவும் இருந்தார். எனவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது மோடிதான் என்றார்.
இந்த ஸ்டிங் ஆபரேஷனை புஷ்ப் குமார் சர்மா என்ற நிருபர் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டிங் ஆபரேஷை பாஜக நிராகரித்துள்ளது. ஏற்கனவே இந்த நபர் மீது டெல்லி போலீஸார் பணம் கேட்டு மிரட்டிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் பாஜக கூறுகிறது.
இந்த ஸ்டிங் ஆபரேஷனில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நிராகரிக்கிறேன். இது ஒரு மோசடியான சிடியாகும். இந்த சதியின் பின்னால் காங்கிரஸ் உள்ளது. திருத்தப்பட்ட வீடியோ இது. யாராவது கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் அதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
2005ம் ஆண்டு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களான துள்சிராம் பிரஜாபதி, சோராபுதீன் ஷேக் ஆகியோரை குஜாத் போலீஸார் கடத்திச் சென்றனர். ஷேக்கின் மனைவி கெளசர் பீயும் உடன் கடத்தப்பட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். துள்சிராம் தான் இதற்கான ஒரே சாட்சி. அவரையும் பின்னர் கொன்று விட்டனர். கெளசர் பீயும் கொல்லப்பட்டு விட்டார்.
முதலில் ஷேக்கும், பிரஜாபதியும் தீவிரவாதிகள் என்றும் பாஜக தலைவர்களைக் கொல்ல வந்ததாகவும் குஜராத் போலீஸார் கதை விட்டனர். ஆனால் இவை போலி என்கவுண்டர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. அவர்தான் இவர்களைக் கொல்ல உத்தரவிட்டதும் பின்னர் தெரிய வந்தது.