அடடே.. பட்டுச் சேலையில் பாரப்பா நம்ம மாப்பிள்ளை, பொண்ணை...!
சென்னை: கோ ஆப்டெக்ஸ் புதிய டிசைன் பட்டுச் சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 25 வகை சேலைகளை அது களத்தில் இறக்குகிறது.
இந்த புதிய வகை சேலைகள் பெண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அட்டகாசமாகவும் இருக்கிறது.
பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்களின் நூதனமான டிசைன் போட்டியில் கோ ஆப்டெக்ஸும் இறங்கியிருப்பதால் கோ ஆப்டெக்ஸ் பட்டுச் சேலைகளுக்கு தனி பார்வை கிடைத்துள்ளது.
சேலையில் மாப்பிள்ளையும், பொண்ணும்
இந்த 25 வகை டிசைன்களில் ஒன்றுதான் கல்யாணப் பட்டுச் சேலை. அதாவது இந்த சேலையில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் படத்தையும் சேர்த்து அச்சடித்துத் தருகிறது கோ ஆப்டெக்ஸ்.
சிறுமுகையிலிருந்து சிரித்து வரும் பட்டு
கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள சொசைட்டி ஒன்றில் இது நெய்யப்படுகிறது. இதன் முதல் சேலையில் இடம் பெற்ற ஜோடிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் திருமணம் நடந்ததாம்.
விலை ரூ. 75,000
இந்த நூதன பட்டுச் சேலையின் விலை ரூ. 75,000 ஆகும். மூன்று வாரங்களாகுமாம் இந்த சேலையை நெய்வதற்கு.
சகாயத்தின் முன்னுதாரண நடவடிக்கை
இந்த வினோதமான பட்டுச் சேலையின் வெற்றிக்குப் பின்னால் நம்ம சகாயம் ஒளிந்திருக்கிறார். இவர்தான் தற்போது கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
கல்யாண மண்டபத்துக்குப் போங்க
இந்த வித்தியாசமான பட்டுச் சேலைக்கு ஆர்டர் பிடிக்க நூதன வழி ஒன்றையும் கடைப்பிடிக்கிறார் சகாயம். அதாவது கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகளையும், ஊழியர்களையும் கல்யாண மண்டபங்களுக்கே நேரில் சென்று ஆர்டர் பிடிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
நேரடியாக போவதே சிறந்தது
இதுகுறித்து அவர் கூறுகையில், கல்யாண மண்டபங்களுக்குப் போய் மாப்பிள்ளை, பெண் குறித்த விவரங்களை சேகரிப்பது கஷ்டமானதுதான். இருப்பினும் பெரிய பெரிய கல்யாண மண்டபங்களுக்குப் போய் மணமக்களின் முகவரியை பெற்ரு நேரடியாக அவர்களது குடும்பத்தினரை அணுகி நாங்கள் விளக்கிக் கூறி ஆர்டர் பிடிக்கிறோம்.
காப்புரிமை பெறப் போகிறோம்
கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் 25 புதிய வகை டிசைன்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றுக்கு காப்புரிமை பெறவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் சகாயம்.
படம்: தி ஹிந்து