லஞ்சம் கொடுத்தால் பெங்களூர் சிறை கைதிகள் அவுட்டிங் போகலாமாம்
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கைதிகள் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வார இறுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
கற்பழிப்பு குற்றவாளியான ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகமுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தப்போயிடினான். அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறையின் பாதுகாப்பு எவ்வளவு அழகாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
வீட்டில் சாப்பாடு
தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் 2012ம் ஆண்டில் 83 நாட்கள் பெங்களூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அவர் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மறுநாள் அதிகாலையில் சிறைக்கு திரும்பிவிடுவாராம்.
ரூ.4 லட்சம் லஞ்சம்
சில நாட்கள் அந்த அரசியல்வாதியை சிறையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களாம். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வாராம். மறுநாளை காலை சிறைக்கு சென்றுவிடுவாராம். இதற்காக அவர் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக லஞ்சம் கொடுத்துள்ளாராம்.
லஞ்சம் கொடுத்தால் அவுட்டிங்
சிறைக் கைதிகள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை லஞ்சம் கொடுத்துவிட்டு மாலை நேரத்திலோ அல்லது வார இறுதிநாட்களிலோ வெளியே சென்றுவிட்டு வரலாமாம். இது போல் வெளியே கிளம்பிய ஜெய்சங்கர் அப்படியே ஓடிப் போயிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அனைத்து கைதிகளும் இப்படி வெளியே போக முடியாதாம். வெளியே சென்றால் நிச்சயம் திரும்பி வந்துவிடுவார் என்று கைதியின் உறவினர்களோ, நண்பர்களோ சிறை அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமாம்.
10 மசால் தோசை
எப்பொழுது எல்லாம் ஒரு கைதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்படுகிறாரோ அப்பொழுது எல்லாம் அவரை பாதுகாக்க நிற்கும் போலீசாருக்கு அவர் தினமும் குறைந்தது 10 மசால் தோசையாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.
உப்புமா, இட்லி, வடை
சிறை கைதிகள் வார்டை கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 3 முதல் 4 பேர் தான் பாதுகாப்பார்கள். அவர்களுக்கு மசால் தோசை, சிகரெட் வாங்கிக் கொடுப்பதோடு பணமும் கொடுக்க வேண்டுமாம். மேலும் மாலை நேரத்தில் சங்கராபுரத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து உப்புமா, வடை, இட்லி ஆகியவற்றை வாங்கி வருமாறு அவர்கள் கைதிகளின் உறவினர்களிடம் கோட்பார்களாம்.