தகவல் திருட்டு: ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை
தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ-மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு முடக்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ- மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
அரசு அதிகாரிகள் அனுப்பும் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாகூ இணையத் தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இ.மெயில் கொள்கை
இதற்கிடையே மத்திய அரசு இன்னும் 2 மாதங்களில் இ.மெயில் கொள்கையை வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதில் பிரத்யேக அரசு இணைய தளம் உருவாக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதனையடுத்து மத்திய- மாநில அரசு அதிகாரிகள் சுமார் 6 லட்சம் பேர் அரசு இணையத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வார்கள். இதன் மூலம் அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்க முடியும் என்று கருதுகிறார்கள்.