ஹைதராபாத் யூனியன் பிரதேசமாகிறது?
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைவது உறுதியாகி இருக்கும் நிலையில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
ஹைதராபாத் யாருக்கு?
குறிப்பாக ஹைதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கும் எஞ்சிய ஆந்திராவுக்கும் 10 ஆண்டுகால தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னர் ஹைதராபாத், தெலுங்கானாவுக்கு சொந்தமாகிவிட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது சீமாந்திரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்களின் கருத்து.
யூனியன் பிரதேசமாக்க கோரினால் நாக்கை அறுப்போம்
இந்த அச்சத்தைப் போக்குவதற்காக ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தெலுங்கானா பகுதியினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் ஹைதராபாத்தை யாரேனும் யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று யார் வலியுறுத்தினாலும் அவர்களது நாக்கை அறுத்து எறிவோம் என்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது,
டெல்லியில் தீவிர ஆலோசனை
இந்த நிலையில் சீமாந்திரா மக்களின் நலனை பாதுகாக்க அமைக்கப்பட்ட ஏ.கே. அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரை உள்ளடக்கியக் குழுவினர் டெல்லியில் ஆந்திர மாநில காங்கிரசாருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் போது ஹைதராபாத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து கொடுப்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் தெலுங்கானா, சீமாந்திராவில் எந்தெந்த மாவட்டங்களை சேர்ப்பது, எப்படி இயற்கை வளத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது போன்ற விசயங்களும் ஆராயப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத்துக்கு யூனியன் அந்தஸ்து?
மேலும் இம்மாத இறுதிக்குள் தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். அப்படி தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் போது ஹைதராபாத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்குவது பற்றி முடிவெடுக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எப்போது தனி மாநிலமாகும்?
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கப்பட்ட பின்னர் தெலுங்கானா, ஹைதராபாத்துக்கு யூனியன் அந்தஸ்து போன்றவை குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரை ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் புதிய மாநிலத்துக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து புதிய மாநிலத்தை உருவாக்கும்.