பெங்களூர் பிதாதி அருகே காமக்கொடூரன் ஜெய்சங்கரை பார்த்து பயந்து ஓடிய டிரக் டிரைவர்
பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பியோடினான். இதையடுத்து அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவி செய்ததாகக் கூறப்பட்டது.
ஜெய்சங்கர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ராமநகரா மாவட்டத்தில் உள்ள ஹாரோஹல்லி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த டிரக்கை ஒருவர் நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார். யாரோ லிப்ட் கேட்கிறார்கள் என்று நினைத்து டிரைவர் டிரக்கை நிறுத்த முயன்றபோது சாலையோரம் நின்ற நபர் கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் என்பதை டிரைவர் அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜெய்சங்கரைப் பார்த்து பயந்துபோன டிரைவர் டிரக்கை கிளப்பிக் கொண்டு சென்று பிதாதியை அடைந்த பிறகு போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து போலீசார் டிரைவர் கூறிய பகுதிக்கு சென்று ஜெய்சங்கரை தேடி வருகின்றனர்.
அதே சமயம் லிப்ட் கேட்டது ஜெய்சங்கராக இருக்காது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் குழு ஒன்று சேலத்திற்கு சென்று ஜெய்சங்கரின் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகிறது. ஜெய்சங்கருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.