நிவேதிதா..!: இந்த ஏழைப் பெண்ணுக்கு உதவலாமே..
-ஜெயலட்சுமி
நான் நல்லா படிப்பேங்க... திடீர்னு இப்படி உடம்பு சரியில்லாம போயிடுச்சு! இப்போ காலேஜ் போக முடியாம இங்க வந்து படுத்திருக்கேன். ஆனா சீக்கிரம் குணமாகி மறுபடியும் காலேஜ் போவேன்... என்று கண்களில் நம்பிக்கை ஒளிர சொல்கிறார் நிவேதிதா.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பத்தாங்காடு கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளி ராஜேந்திரன். மனைவி திலகவதி, மகள் நிவேதிதா, இரண்டு ஆண் குழந்தைகளுடன் நிறைவான வாழ்க்கை.
பி.இ. கம்யூட்டர் சயின்ஸ்:
நிவேதிதா மூத்தப் பெண் குழந்தை. படிப்பில் படு சுட்டி என்பதால் ஊருக்கே செல்லப்பிள்ளை. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்கவே பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார்.
மூன்றாண்டுகள் வரை பிரச்சனையில்லை. திடீரென்று வயிறு வலிக்கவே, லீவு போட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
படுத்த படுக்கையாக:
மாறி மாறி பார்த்த சிகிச்சை ஒரேடியாக போட்டு தாக்கிவிட்டது. சுறுசுறுப்பாய் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த பெண் இப்போது நடமாடக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்:
உள்ளூர் நிருபர்கள் வாயிலாக நிவேதிதாவின் நிலை தெரியவே, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மூலமாக இப்போது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. அவருக்கு என்ன வியாதி என்பதை கண்டறிய பயாப்சி டெஸ்ட் எடுத்துள்ளனர்.
நேரில் சந்தித்தபோது...:
நிவேதிதா பற்றி கேள்விப்பட்டு அவரை நேரில் போனபோது நம்பிக்கையோடு மெதுவாக பேசினார்.
நான் போன வருசம் வரைக்கும் நல்லாதான் இருந்தேன். நல்ல மார்க் வாங்கி தத்தனூர்ல பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஒவ்வொரு தேர்வுலயும் நல்ல கிரேட் வாங்குவேன்.
3-வது வருடம் முடியும் போது வயிற்று வலி வந்தது. ஊருக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டு மறுபடி கல்லூரிக்குப் போனேன். அங்கே போனதும் மறுபடி வலி வந்தது. அதனால திரும்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு ஒரு வருசமா பல ஆஸ்பத்திரிகளுக்கும் போய் வைத்தியம் பார்த்தோம். ஆனா எனக்கு என்ன நோய் இருக்குன்னு யாரும் சொல்லல.
25 கிலோவாகிட்டேன்:
மருந்து, மாத்திரைகள் கொடுப்பாங்க. அதை சாப்பிட்டு சாப்பிட்டு குடல் வெந்ததால் எதை சாப்பிட்டாலும் ரத்த வாந்தி வந்தது. மாத்திரை கூட சாப்பிட முடியல. 50 கிலோவாக இருந்த நான், இப்ப 25 கிலோவாக குறைந்து படுத்த படுக்கையாகிட்டேன். எழுந்திருக்கக்கூட முடியாது. பாத்ரூமுக்குக் கூட எங்கம்மா, அப்பா துணையோடதான் போகணும்.
கடனாளி ஆகிட்டாங்க:
எனக்கு மருத்துவம் பார்க்க ஊரெங்கும் கடன் வாங்கிட்டு கடனாளியா நிக்கிறாங்க எங்க அப்பா. சித்தா வைத்தியம் பார்த்தோம். இப்போ ஊர்காரங்க உதவியால இங்கே வந்திருக்கேன். பயாப்ஸி டெஸ்ட் எடுத்திருக்காங்க... ரிசல்ட் இனிமேதான் வரும். நான் சீக்கிரம் குணமாக நானா எழுந்து நடமாடனும் என்றார்.
செல்லப் பொண்ணு:
ஊரில் இருந்து நிவேதிதாவிற்கு துணையாக அப்பா ராஜேந்திரன் வந்திருக்கிறார். அவர்தான் தாயுமானவனாய் இருந்து மகளை கவனித்துக் கொள்கிறார். பெண் குழந்தை என்பதால் இப்போது நிவேதிதாவை சிறப்பாக கவனித்துக் கொள்ள இரண்டு நர்ஸ்கள் வருவதாக சொன்னார்.
சாப்பிட முடியலை:
நல்லா படிச்ச புள்ளைக்கு இப்படி ஒரு நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாக உடலை உருக்கிக்கிட்டு இருக்கு. வைத்தியம் பார்க்க வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியல. நல்லவங்க உதவியால இங்க வந்து அட்மிட் ஆகிட்டோம். திருவாரூர் த.மு.மு.க அமைப்பின் ஆம்புலன்சில் ஏற்றிவந்து அவர்கள் செலவிலேயே பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்துவிட்டனர். சிகிச்சை இலவசம் என்றாலும் சில கை செலவுகளுக்கு கூட பணமில்லாமல் சிரமத்தில்தான் இருக்கிறேன் என்றார்.
சீக்கிரம் குணமாகணும்:
எனக்கு கஷ்டத்தைப் பற்றி கூட கவலையில்லை. என் பொண்ணு குணமாகி தானா எழுந்து நடமாடணும். அப்புறம் காலேஜ் போகணும் அதுதான் இப்போதைக்கு என்னோட ஆசை என்று கூறி கண் கலங்கினார். நிவேதிதாவிற்கு சிகிச்சைகள் தொடங்கிவிட்டன. அவர் விரைவில் குணமடைந்து கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதே நமது ஆசையும்.
நிவேதிதாவுக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரது தந்தையை 09865233867 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளவும்.
நிவேதிதா, விரைவில் குணமடைந்து நல்லபடியாக ஊருக்கு திரும்புவார் என்று நம்புவோம்.
(அவரது தந்தை தனது வங்கிக் கணக்கு விவரத்தை உடன் கொண்டு வரவில்லை. அந்த விவரம் கிடைத்த பின் இந்தச் செய்தியில் அதை சேர்ப்போம்)