ஜின்னாவின் பேச்சு அடங்கிய டேப்களை பாகிஸ்தானிடம் அளித்த ஆல் இந்தியா ரேடியோ
ஆல் இந்தியா ரேடியோவிடம் ஜின்னா பேசி உரைகள் அடங்கிய டேப்கள் உள்ளன. இதில் 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஜின்னா நிகழ்த்திய உரைகள் அடங்கிய டேப்களை தங்களிடம் அளிக்குமாறு பாகிஸ்தான் பிராட்காஸ்டிங் கார்பரேஷன் (பிபிசி) ஆல் இந்தியா ரேடியோவை கேட்டுக் கொண்டது.
பிபிசியின் 4 ஆண்டு கால முயற்சியை அடுத்து அந்த டேப்களை ஆல் இந்தியா ரேடியோ ஒப்படைத்துள்ளது. இந்த டேப்களின் தரத்தை பார்த்துவிட்டு அதை அடுத்த வாரம் ஒலிபரப்ப பிபிசி திட்டமிட்டுள்ளதாம். இது தவிர மேலும் ஒரு உரை அடங்கிய டேப்பையும் அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை அதாவது தற்போதுள்ள கைபர் பக்டுன்க்வாவை பாகிஸ்தானோடு சேர்ப்பதா அல்லதா இந்தியாவுடன் சேர்ப்பதா என்று ஜின்னா 1947ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி உரை நிகழ்த்தினார்.
பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி பேசிய ஜின்னா பாகிஸ்தான் ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார். இந்த இரு உரைகளைத் தான் பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளது இந்தியா.