ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைத்த மலாலா யூசப்சாய்
லண்டன்: தாலிபான்களால் தலையில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப்சாய் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொது நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
தாலிபான்களால் சுடப்பட்டு தலையில் குண்டடிபட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்(16) சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் செட்டிலாகிவிட்டது.
தற்போது மலாலா பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிர்மிங்காம் பகுதியில் 189 மில்லியன் பவுண்ட் செலவில் பொது நூலகம் கட்டப்பட்டது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நூலகம் இது தான். இந்த நூலகத்தை மலாலா திறந்து வைத்தார்.
இது குறித்து மலாலா கூறுகையில்,
பிர்மிங்காம் தான் இங்கிலாந்தின் இதயத்துடிப்பு. இந்த நகரம் எனக்கு மகிவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் நான் குண்டடிபட்ட 7 நாட்களுக்கு பிறகு இங்கு தான் உயிர் பிழைத்தேன். இந்த நகரத்திற்கு என்னை பிடித்துள்ளது என்பதை நூலக திறப்பு விழா மூலம் தெரிகிறது. நானும் இந்த நகரை விரும்புகிறேன் என்றார்.