தண்டனை பெற்ற எம்.பி, எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்: அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தண்டனை தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால், அதன் மீதான தீர்ப்பு வரும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த பிரிவை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறுபவர்கள் அன்றே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசித்த மத்திய அரசு, "தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்கலாம்; ஆனால் அவர் அவையில் நடைபெறும் வாக்களிப்பில் பங்கேற்க முடியாது, அதே சமயம் தேர்தலில் போட்டியிடலாம்" என சட்ட திருத்த மசோதா ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றியது.
இந்நிலையில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்பு வெளியான உடனேயே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்த மசோதாவை குறிப்பிட்டு, "ஒரு வேட்பாளர் சிறையில் இருக்கும்போது தேர்தலில் போட்டியிடுவது அவருக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் அவரால் ஓட்டுப்போட முடியாது? இது என்னவிதமான சட்டம்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இருப்பினும் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மறுசீராய்வு செய்யக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.