சிரியாவில் ரசாயன தாக்குதல்கள்.. இலங்கைக்கு ரொம்பவே கவலையாம்!!
கொழும்பு: சிரியாவில் பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் மிகவும் கவலைக்குரியது என்று போர்க் குற்றச்சாட்டுக்குள்ளாக்கியிருக்கும் நாடான இலங்கை கூறியுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை ஏராளமாக பயன்படுத்தி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். இதனால் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது,
இந்த நிலையில் சிரியாவில் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன் ரசாயன ஆயுதங்களின் உற்பத்தி,சேகரிப்பு,பயன்பாடு ஆகியவற்றை இலங்கை வெறுப்பதாகவும் ரசாயன ஆயுதங்கள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்றும் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.