‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ சோனியாவிற்கு வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்!
இஸ்லாமாபாத்: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உணவு பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தின் போது உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மறுநாள் வீடு திரும்பினார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்பில் வாழ்த்துச்செய்தியும், மலர்க்கொத்தும் சோனியாவிற்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. டெல்லிய்யில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் மூலம் அந்த மலர்கொத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மலர் கொத்தோடு கூடிய வாழ்த்து அட்டையில், ‘விரைவில் குணம்பெற வாழத்துக்கள்' என்ற வாசகமும் எழுதப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. எல்லையில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய அரசியல் தலைவருக்கு பாகிஸ்தான் பிரதமர் நலம் விசாரித்து மலர்கொத்து அனுப்பியுள்ளது இரு நாடுகளுக்கிடையே நட்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.