இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை: ஏ.கே. அந்தோணி
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய படைகள் ரோந்து பணியில் ஈடுபடுவதை சீனா தடுத்து வருவதாகவும் இந்தியாவின் 640 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும் தேசிய பாதுகாப்பு சபை, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து லோக்சபாவில் அறிக்கையை தாக்கல் செய்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே .அந்தோணி, தேசிய பாதுகாப்பு சபை பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் லடாக்கை இதர பகுதிகளுடன் இணைக்கும் சாலை கட்டமைப்பு பற்றிதான் குறிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஊடுருவல் பற்றி அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் சீனாவிடம் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் மத்திய அரசு பாதுகாக்கும். எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் வலுப்படுத்தப்படும் என்றார்.