உள்ளிருப்பு போராட்டம் நடத்திய டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 103 பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் டி.டி.நகரில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரியில் கடந்த 2011ஆம் ஆண்டு 103 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் டி.டி.மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பதாக கூறி, புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ-மாணவிகள் அனைவரையும் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுடைய கல்வி பாதிக்காத வண்ணம் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தியும் கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவக் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி முதல் பாதிக்கப்பட்ட டி.டி.மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகளில் 70 பேர் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவக் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களுடைய பெற்றோர் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்.மருத்துவக் பல்கலைக்கழக வளாகத்தில் 17வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 103 மாணவ- மாணவிகளையும் போலீசார் இன்று கைது செய்தனர்.