வைகைச் செல்வன் திடீர் மாற்றத்தின் பின்னணி… பரபரப்புத் தகவல்கள்
அதிமுகவின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளராக பதவி வகித்த அருப்புக்கோட்டை எம்எல்ஏ வைகைச் செல்வன் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆறு மாத காலம் அமைச்சராக இருந்த வைகைச் செல்வனின் பதவி ஆசிரியர் தினத்தன்று பறிக்கப்பட்டது. அதோடு அவர் வகித்து வந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது.
சபீதா உடன் மோதல்
இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறையின் 7 இயக்குனர்கள் மாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.
புகார்தான் காரணமா?
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கமான செல்வாக்கை பயன்படுத்தி வைகைச் செல்வனுக்கு எதிராக சபீதா புகார் கூறியதாகவும், இதனைத் தொடர்ந்தே இந்த பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. வைகைச் செல்வனின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் ஆட்சி மேலிடத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது. பதவி பறிப்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யாரையும் மதிக்க மாட்டேங்கிறார்
இந்நிலையில் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டதற்கு, அ.தி.மு.க.வின் மூத்த புள்ளிகளை அவர் மதிப்பதில்லை என்று கூறப்பட்ட புகார் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமைச்சராக பதவி ஏற்றபின்னர் சக அமைச்சர்கள் கூறுவதை கேட்பதில்லை என்றும் தன்னிச்சையாக செயல்பட்டதே கல்தாவிற்கு காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
வைகைச் செல்வனுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்தாவை தொடர்ந்து, மேலும் சிலரும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக இருந்த வைகைச்செல்வன், தன் பேச்சாற்றலால், கட்சியின் இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். இதனையடுத்து இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரியில் அமைச்சராக பதவியேற்றார். படிப்படியாக வளர்ச்சியடைந்த வைகைச் செல்வன் ஒரே நாளில் கட்சிப்பொறுப்பையும், அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார்.