ஜம்மு-காஷ்மீர் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். முகாம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஷோபியான் என்ற இடத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் பலியானதாகவும், இதில் 3 பேர் தீவிரவாதிகள் என்றும், மற்ற ஒருவர் சிவிலியன் என்றும் சி.ஆர்.பி.எப். உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கையெறி குண்டுகள், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஆனால் பலியான 4 பேரும் சிவிலியன்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் புகழ்பெற்றுள்ள பிரபல இசைக்கலைஞர் ஜுபின் மெக்தாவின் இசை நிகழ்ச்சிக்கு இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மிக்கேல் ஸ்டெயினர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புக்கு தீவிரவாத குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையிலேயே தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.