இஸ்ரோ செயற்பாடுகளில் முறைகேடுகள்.. சி.ஏ.ஜி.யின் புது அஸ்திரம்
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், ஹெலிகாப்டர்கள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தி அரசியல் சூறாவளியை கிளப்பிவிட்டதுதான் சிஏஜி. தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், துறைகளின் செயல்பாடுகளை சி.ஏ.ஜி. அமைப்பு தணிக்கை செய்துள்ளது. அதில் இந்தியாவுக்கு உரிய விண்வெளி சுற்றுப்பாதையில் பன்னாட்டு தனியார் நிறுவன செயற்கைகோளை நிலை நிறுத்த அனுமதி வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்திய சுற்றுப் பாதையில் வெளிநாட்டு செயற்கைக் கோள்
இது தொடர்பாக சிஏஜி அறிக்கையில், இன்டெல்சாட் என்னும் சர்வதேச தனியார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோளை இந்திய நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் வருகிற 55-இ என்ற சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் வருகிற சுற்று வட்டப்பாதையில் இந்திய செயற்கைக்கோள்களை மட்டுமே நிலை நிறுத்துவது வழக்கம். இந்திய சுற்றுப்பாதையை வெளிநாட்டு செயற்கைக்கோள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து இருப்பது, நாட்டின் செயற்கைக்கோள் தொலைதொடர்பு கொள்கையை மீறிய செயலாகும்.
அன்னிய நிறுவனத்துக்கு பலன்
அதுமட்டுமல்ல சர்வதேச தொலைதொடர்பு யூனியனின் ரேடியோ ஒழுங்கு முறைகளையும் மீறிய செயல். அன்னிய நிறுவனம் வரம்பு மீறி பலன் அடையச் செய்யப்பட்டுள்ளது.
இன்டெல்சாட் ஆதாயம்
மேலும் 2003 பிப்ரவரி முதல் 2004 பிப்ரவரி வரையிலான ஓராண்டு காலத்திற்கு இன்டெல்சாட்டிடம் 16 டிரான்ஸ்பாண்டர்கள் (தொலைதொடர்பு சாதனம்) குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டை நிறுத்தி விட்ட இன்சாட் 2 டிடீ செயற்கைக்கோளின் சேவைகளை தொடர்வதற்காக இடைக்கால ஏற்பாடாக இது செய்யப்பட்டுள்ளது.
அப்போதிருந்து இன்சாட் 2 டிடீயின் சுற்று வட்டப்பாதை அந்த அன்னிய செயற்கைக்கோளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்சாட் டிடீக்கு பதிலான செயற்கைக்கோள் செப்டம்பர் 2003-ல் விண்ணில் செலுத்திய பின்னரும் இன்டெல்சாட்டின் ஐஎஸ் 702 செயற்கைக்கோள் அதே சுற்றுப்பாதையில் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வருகிற செயற்கைக்கோளுக்கு பேக்-அப் வழங்குவது ‘இஸ்ரோ'வில் நடைமுறையில் இல்லை என்றபோதிலும், இதுவும் மீறப்பட்டுள்ளது.
பேண்ட்வித் ஒதுக்கீட்டிலும் முறைகேடு
நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தொலைதூரக் கல்வி வழங்குவதற்கு உதவும் முதல் செயற்கைக்கோள் பேண்ட்வித் ஒதுக்கீடுகளிலும் முரண்பாடுகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.