கூட்டாளி அக்தரை மனிதவெடிகுண்டு தாக்குதலுக்கு தயார்படுத்தினேன்: யாசின் பட்கல் வாக்குமூலம்
டெல்லி: தமது கூட்டாளி அசதுல்லா அக்தரை தற்கொலைப் படை தாக்குதலுக்கான மனிதவெடிகுண்டாக தயார்படுத்தியதாக இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் யாசின் பட்கல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்திய- நேபாள எல்லையில் யாசின் பட்கலும் கூட்டளி அசதுல்லா அக்தரும் அண்மையில் டெல்லி சிறப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களைப் பற்றிய பல பின்னணி விவரங்கள், அவை நிகழ்த்தப்பட்ட விதம் போன்றவற்றை பட்கல் விவரித்திருக்கிறார். இந்நிலையில் தம்முடன் சிக்கிய அக்தர் ஒரு மனிதவெடிகுண்டு என்றும் புது குண்டைப் போட்டிருக்கிறார் பட்கல்.
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் மனிதவெடிகுண்டுத் தாக்குதலாக அக்தர் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம் என்று பட்கல் கூறியுள்ளார். அக்தரும் கூட 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் இதற்காக தாம் பயிற்சி பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.