உத்தர்காண்ட்டில் 4 நாட்களில் 160 உடல்கள் கண்டெடுப்பு
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தில் மேலும் 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் 160 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
உத்தர்காண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளப் பெருக்கில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேரது நிலைமை என்னவென்று தெரியாமலேயே போனது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட கேதார்நாத் பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு 64 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மேலும் கெளரிகுண்ட் மற்றும் ஹருர்சட்டி பகுதிகளில் இருந்து 68 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த உடல்களில் இருந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு, டி.என்.ஏ.சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.