இந்தியன் வங்கி மோசடி வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை
சென்னை முத்தியால்பேட்டை இந்தியன் வங்கி கிளையானது சத்தியம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு 1997 மே மாதம் ரூ.10 கோடி கடன் வழங்கியது. இந்த கடன் வழங்க முறையான அனுமதியை வங்கி அதிகாரிகள் பெறவில்லை.
இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு ரூ.31.75 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் 1997-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இந்தியன் வங்கி தலைவராக 1992 முதல் 1996 வரை பதவி வகித்த எம்.கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் எம்.வரதராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு சென்னையிலுள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த எஸ்.மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.
அத் தீர்ப்பில், கோபாலகிருஷ்ணன், வரதராஜன் உள்பட அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4.5 லட்சம் அபராதமும் விதிக்கிறேன் என்றார்.