வறுமைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு: ஆய்வில் தகவல்
லண்டன்: ஏழ்மைக்கும் புத்திசாலித்தனத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. வறுமையானது மனிதர்களின் மூளைத்திறனை பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுமுடிவுகள் இதனை நிரூபித்துள்ளன.
வறுமைக்கும் தவறான முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக முன்பு கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மூல காரணங்கள் சரியாக தெளிவில்லாமல் இருந்தன. தற்போதையை ஆய்வில் வறுமைக்கும் மூளைத்திறனுக்கும் தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் ஆய்வு
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழுவினர், தமது ஆய்வின் ஒருபகுதியாக இந்தியாவில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை முறையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
அறுவடைக்கு முன்
அறுவடைக்கு முன்பு சாகுபடிக்காக கடன் பட்டிருக்கும் விவசாயிகள் அப்போது வறியவர்களாக இருப்பார்கள். அதன்பின்னர் அறுவடைக்குப் பின்னர் ஆனால் வருமானம் எதுவும் கிடைத்திருக்காத காலம், அப்போது வறுமையின் உச்ச கட்டத்தில் அவர்கள் இருப்பார்கள்.
கையில் பணம்
அதன்பின்னர் பணம் கைக்கு கிடைக்கின்ற காலப்பகுதி என விவசாயிகளின் மூன்று கால கட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் அவர்களுக்கு மூளைத்திறனை சோதிக்கும் சோதனைகள் வைக்கப்பட்டன.
புத்திசாலித்தனமாக பதில்
கையில் பணம் இருந்த காலப்பகுதியில் நுண்ணறிவுத் திறனை பரீட்சிக்கும் சோதனைகளில் விவசாயிகள் கெட்டிக்காரர்களாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மூளைத்திறனை தீர்மானிக்கிறது.
விவசாயிகளின் வருமானங்களுக்கு ஏற்ப அவர்களின் மூளைச் செயற்பாடுகள் மாறுபட்டிருந்ததை உறுதிசெய்துள்ளதாக பிரிட்டனின் வோர்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்தி மணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விவசாயிகள்
அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆய்வு நடத்தப்பட்டது.
இருதரப்பிடமும் இலகுவான, சிரமமான அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டன. அங்கும், சாதாரண கேள்விகளின்போது பணக்காரர்களிடத்திலும் ஏழைகளிடத்திலும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை.
ஆனால் சிரமமான கேள்விகளின்போது, அமெரிக்க ஏழைகளின் அறிவுத்திறன் குறைந்து இருந்ததாக மருத்துவர் ஆனந்தி மணி கூறினார்.
வறுமையில் இருந்தால்
இந்திய கரும்பு விவசாயிகளிடத்தில் கண்டறியப்பட்ட இந்த முடிவுகளை அமெரிக்காவிலும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்துபார்த்துள்ளனர். ஏழைகளின் மூளைச் செயற்பாடுகளை பெரும்பாலும் பணக்கஷ்டங்கள் பற்றிய கவலைகளும் அழுத்தங்களும் ஆக்கிரமித்துவிடுகின்றன.