சென்னையில், ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது: 150 வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி
சென்னை: சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் ராட்சதக் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக போரூர் அருகே, அய்யப்பந்தாங்கல் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியில் இருந்து தான் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கன அடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு போரூர் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப் பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அய்யப்பந்தாக்கல் பகுதி குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் நீரால் சூழ்ந்தது. இ.வி.பி நகரை சூழ்ந்த வெள்ள நீர், அங்குள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் திடுக்கிட்ட பொதுமக்கள், வீடுகளை விட்டு பாதுகாப்பான மேடான இடங்களில் சென்று நின்று கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போரூர், செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள வால்வுகளை அடைத்தனர். இதன் மூலம் ராட்சத குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து, குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி தொடங்கி நடைபெற்றது.
இதன் விளைவாக கே.கே.நகர் உள்ளிட்ட குடிநீரேற்று நிலையங்களுக்கு தண்ணீர் வரவில்லை. குழாயில் வந்த தண்ணீர் வீணாகி ஐயப்பன்தாங்கல் பகுதியில் குளமாக தேங்கியதால், மின்மோட்டார்கள் மூலம் அஓஅகுதியில் தேங்கிய நீர் வெளியேற்றும் பணி செய்யப்பட்டது.