பெங்களூர்: ‘இஸ்கான்’ கோவில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ‘இஸ்கான்' கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பெங்களூர் புறநகரில் கனகபுரா சாலையில் உள்ளது புகழ்பெற்ற ‘இஸ்கான்' கோவில். இண்டர்நேஷனல் சொசைட்டி பார் கிருஷ்ணா கான்சியஸ்னஸ் என்பதன் சுருக்கமே ‘இஸ்கான்' ( ISKCON ). நேற்று இந்த கோவிலின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இடிந்த சுவர், கோவிலின் அருகே இருந்த 4 வீடுகள் மீது விழுந்து. இதில் சிக்கி, 6 வயது சிறுமி உட்பட,சென்னப்பா (40) மற்றும் தொட்டகப்பா (70) என்ற 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 6 பேரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், ‘பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க ‘இஸ்கான்' கோவில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடுகள் கட்டித்தரவும் சம்மதித்துள்ளது. அனுமதியின்றி காம்பவுண்டு சுவர் கட்டியதற்காக, கோவில் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.