உ.பி. வன்முறை- ஏழு மாநிலங்களுக்கும் கலவரம் பரவும் அபாயம்- மத்திய அரசு எச்சரிக்கை!!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் முசாபர் மாவட்டத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை நாட்டின் 7 மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் ஒரு ஈவ் டீசிங் விவகாரம் இரு குடும்பத்தினரிடையே மோதலானது. இந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவே இரு பிரிவினரிடையேயான வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைகளில் மொத்தம் 32 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச வன்முறைகள் தொடர்பாக அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் மத்திய உளவுத் துறையான ஐ.பி, முசாபர் மாவட்டத்தில் மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள் பலவற்றுக்கும் இந்த கலவரம் பரவும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக அலிகார், மதுரா, ஹபூர், மீரட், சாம்லி, மொராதாபாத், ராம்பூர், சஹரன்பூர் ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.
அத்துடன் ஜம்மு காஷ்மீர், கேரளா, கர்நாடகா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்த கலவரம் பரவும் அபாயம் இருப்பதாக ஏற்கெனவே மத்திய உளவுத் துறை இரு முறை எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறது. தற்போது மேலும் பல மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக 11 மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.