தமிழீழமே தீர்வு- சுதர்சன நாச்சியப்பன்! இலங்கையை பிரிக்கக் கூடாது- நாராயணசாமி!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. அந்த போர்க்கப்பல்களை தமிழருக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என இலங்கைக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி ஈழத் தமிழருக்கு எதிராக அந்த போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டால் அது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவிப்போம்.
சிங்களரும் தமிழரும் இலங்கை அரசியலமைப்புக்கு தமிழர்களும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்களைப் பொறுத்தவரை ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
மத்திய அரசின் இரண்டு இணை அமைச்சர்களும் ஈழத்க் தமிழர் பிரச்சனையில் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.