தட்ஸ் தமிழ் வாசகர்களால் ஷார்ஜாவில் இணைந்த தமிழ்க் குடும்பம்: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தம்பதி
ஷார்ஜா: தட்ஸ் தமிழில் வெளியான செய்தியை அடுத்து கிடைத்த உதவியால் ஷார்ஜாவில் உள்ள தமிழ்க் குடும்பம் ஒன்றும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.
ஷார்ஜா நேஷனல் பெயின்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வருபவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்ய வைக்கப்பட்டார்.
இதன் காரணமாக இவரது மனைவி சுந்தரி மூன்று குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மூத்த மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்தவரால் நடத்தப்பட்டு வரும் பெங்களூர் ரெஸ்டாரென்ட் இவர்களுக்கான உணவினை வழங்கி வந்தனர்.
இதுபோன்ற சிக்கலில் இருப்பது குறித்து வழக்கறிஞர் மஹமூது அலவி முதுவை ஜஹாங்கீர் மற்றும் முதுவை அஹமது இம்தாதுல்லா ஆகியோரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தட்ஸ் தமிழில் இத்தகவல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
தட்ஸ்தமிழ்
சுதீஷ் குடும்பம் தவிப்பது குறித்து தட்ஸ் தமிழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியைப் பார்த்து அமீரகம், வளைகுடா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் இருந்து தட்ஸ் தமிழ் வாசகர்கள் தங்களது உதவியினை பணமாகவும் மற்றும் ஆறுதல் தெரிவித்தும், இதற்காக எவ்விதம் உதவிடலாம் என்பது குறித்தும் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
சுதீஷ் விடுவிப்பு
தட்ஸ் தமிழில் செய்தி வெளியிட்ட பிறகு கிடைத்த உதவியின் காரணமாக கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹமூது அலவி என்பவரது முயற்சியால் 08.09.2013 அன்று சுதீஷ் விடுவிக்கப்பட்டார்.
எனினும் இவரது விசா காலாவதியாகிவிட்டதால் அதனை முடித்துவிட்டு அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறார் சுதீஷ். வாடகை வேன் ஓட்டி வரும் இவருக்கு பொருளாதார ரீதியாக இன்னும் சிறிது பணம் தேவைப்படுகிறது. வாடகை வேனுக்கு பணியாக வழங்கி கூட இவரை தற்போதைய சிக்கலில் இருந்து உதவிடலாம்.
வழக்கறிஞர் கௌரவிப்பு
இதற்காக வழக்கறிஞர் செலவு உள்ளிட்ட எவ்வித பிரதிபலனும் இல்லாது முழுமுயற்சியுடன் ஈடுபட்ட வழக்கறிஞர் அலவி பொன்னாடை அணிவித்து தட்ஸ் தமிழ் வாசகர்களால் கௌரவிக்கப்பட்டார்.
அவர் கூறுகையில், இது போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். கணவர் கைது செய்யப்பட்ட பின்னரும் இவரது மனைவி மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டார். இதன் காரணமாகவும், தட்ஸ் தமிழின் உதவியின் காரணமாகவும் விடுவிக்கப்பட்டுள்ளார். தனக்கு கிடைத்த உணவுப் பொருட்களை மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கு வழங்கியுள்ள சுந்தரியின் மனிதாபிமானம் மேலும் பாராட்டத்தக்கது என்றார்.
வாசகர்களின் மனிதாபிமானம்
குறைந்த வருமானமுடைய, வாகன வசதி இல்லாதவர்கள் கூட சுதீஷ் குடும்பத்தினரைத் தேடி வந்து உதவி வரும் தட்ஸ் தமிழ் வாசகர்களின் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது, போற்றத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு- 055 53 89 276 / 050 52 72 691 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.