சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
முதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகர கடந்த 2 நாட்களாக வட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் டூ காலாண்டுத் தேர்வு மட்டும் நேற்று தொடங்கியது.
இந்தநிலையில் மழை நீடிப்பதாலும், 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதாலும் மழை நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை மூட அவர் உத்தரவிட்டார்.
இன்று நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகளை கடைசித் தேர்வுக்குப் பின்னர் நடத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.