அரிசி ஆலைக்குள் புகுந்து விளையாடி ஊழியர்களை பதறடித்த 7 அடி நீள நல்ல பாம்பு!
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அரிசி ஆலைக்குள் புகுந்த நல்ல பாம்பு அனைவருக்கும் ஆட்டம் காட்டி விட்டது.
கடையநல்லூர் அட்டை குளம் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் 7 அடி நீளம் கொண்ட கடுமையான விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று அங்குமிங்கும் ஓடி உள்ளது. அதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி உள்ளனர்
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், பாவம் இந்த அரிசி ஆலை ஊழியர்கள் எம்மாத்திரம். தாங்கள் வேலை செய்யும் அரிசி ஆலையில் பாம்பைக் கண்ட ஊழியர்கள் பதறியடித்து வெளியில் ஓடி வந்துள்ளனர். ஆலைக்குள் புகுந்த அந்த விஷப் பாம்போ படமெடுத்து ஆடுவதும், பதுங்குவதுமாக கண்ணாமூச்சிக் காட்டியுள்ளது.
பாம்பின் விளையாட்டு ஓய்ந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் வனத்துறை அதிகாரி செந்தில்குமாருக்கு அரிசி ஆலை தொழிலாளர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் சரவணன் ,சேக் ஒலி உள்ளிட்ட வனத்துறை குழுவினர் விரைந்து வந்து அந்த விஷ பாம்பை தேடியுள்ளனர்.
விளையாடி களைத்த பாம்பு சுவரின் ஓரத்தில் உள்ள பொந்தில் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் பாம்பை பத்திரமாக மீட்டு சாக்கு பையில் அடைத்த வனத்துறையினர் கடையநல்லூர் கருப்பா நதி அணை பகுதியில் கொண்டு பாதுகாப்பாய் விட்டனர். இதனைத் தொடர்ந்து அரிசி ஆலை ஊழியர்கள் நிம்மதி அடைந்து தங்களது பணிகளைத் துவக்கினர்.
நல்ல வேளை அரிசி ஆலைக்குள் சிக்கி அரைபடாமல் தப்பியதே.. அந்தஅளவுக்கு பாம்பு கொடுத்து வைத்ததுதான்!