குடும்பக்கட்டுப்பாட்டு சிகிச்சையில் விபரீதம்.. நாகர்கோவில் அருகே இளம் பெண் பலி, உறவினர்கள் போராட்டம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளை பகுதியை சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான அவரின் மனைவி ஆஷா 9 நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஷாவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மயக்க மருந்து கொடுத்ததில் சுய நினைவை இழந்த ஆஷா 3 மூன்று நாட்களாக கோமா நிலையில் இருந்ததாக கூறபடுகிறது. அந்த தருணத்தில் ஆஷாவை பார்க்க கூட உறவினர்களை மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஆஷா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சிய போக்கும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என்று குற்றம் சாட்டினர்.
ஆஷாவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மகள் இறந்த சம்பவத்தை கேட்டு ஆஷாவின் தாய் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.