மண்ணெண்ணெய் மானியம், ஓய்வூதிய பயன்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு
அடல் ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான அரசின் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மண்ணெண்ணெய் மானியம் பெறவும் தற்போது, ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதே போல வயதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும் 'அடல்' ஓய்வூதியத்திட்டத்தில் பயன்பெறவும் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் சமையலுக்குப் பயன்படும் சிலிண்டர் பெற, ரேஷன் கார்டு மற்றும் பான்கார்டு விண்ணப்பிக்க, புதிய வாகனங்கள் பதிவு செய்ய, புதிய வங்கிக்கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புக்கு அப்ளை செய்ய, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, விவசாயிகள் மானிய விலையில் உரங்கள் பெற என அரசின் பலத் திட்டங்களுக்கு ஆதார் அட்டையில் உள்ள எண் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் மானியம் பெறவும் தற்போது, ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது, மத்திய அரசு. இத்திட்டத்தில் மக்கள் அனைவரும் பயன்பெற வசதியாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.
வயதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கும் ' அடல்' ஓய்வூதியத்திட்டத்தில் பயன்பெறவும்; வருகிற ஜூன்15க்குள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் எனவும் மைய அரசு ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது,மண்ணெண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும்.
எனவே ஆதார் அடையாள அட்டை இல்லாவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.