விசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு
அபுதாபி: விசா விதிகளை பின்பற்றாததால் 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு துபாயினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் துபாயில் உள்ள இந்திய தூதரகம், டிராவல் நிறுவனங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் இருந்து உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிகளின் படி , டிராவல் விசா வைத்திருக்கும் நபர் ஹோட்டலில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது உறவினரின் பரிந்துரை வேண்டும். அத்துடன் திரும்பி செல்வதற்கான புக்கிங் டிக்கெட் ஆகியவை வைத்திருக்க வேண்டும். இதுதான் விசா விதிகள்.
இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், விசா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் துபாயினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் துபாய் விமான நிலையத்திலேயே சிக்கியுள்ளார்கள்.
14 பேர் துபாயினுள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் நேற்று இரவு முதல் துபாய் விமான நிலையத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.