கெய்ல் மாஜிக்.. ஜித்து ஜில்லாடி ஆட்டம்.. கடைசில பேட்டை உடைக்கப் பார்த்தீங்களே பாஸு!
அபுதாபி: கிறிஸ் கெய்ல்.. ஒரு செம ஆட்டக்காரர்.. அடிக்க ஆரம்பிச்சுட்டா பார்ட்டியை நிறுத்த முடியாது.. பின்னிப் பெடலெடுத்து பொட்டலம் கட்டி எடுத்து விடுவார்.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா.. புயலும் கூட வெட்கப்பட்டு ஓடிப் போய் விடும். அப்படி ஒரு பொளேர் ஆட்டம் அது.
இந்த தொடரில் அவரை ஆரம்பத்தில் பயன்படுத்தவில்லை. உட்கார வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கும்ப்ளே - கே.எல். ராகுல் அன் கோ. அவரும் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார். கடைசி நேரத்தில்தான் களம் இறக்கப்பட்டார் கெய்ல்.
பொளந்து கட்டும் கெய்ல்
கெய்ல் ஆட வந்த பிறகு பஞ்சாப் அணி அந்நியனாக மாறி துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் கெய்ல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். என்னையவாடா உட்கார வைத்து உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் குடிக்க வச்சீங்க என்று சொல்வது போல பொளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்.
வெளுத்தெடுத்த கெய்ல்
அதிலும் இன்று அவர் ஆடிய ஆட்டமெல்லாம் வேற லெவல். ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொண்ட விதமே அவரை உலக நாயகன் என்று பறை சாற்றிக் கொண்டே இருந்தது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் என்று சொல்வது போல.. இவரும் திரும்பிய திசையெல்லாம் பந்துகளைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். செம ஆட்டம்.
99 ரன்களில் அவுட்
ராஜஸ்தான் பவுலர்கள் இவரை ஆட்டமிழக்க வைக்க என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் விட்டனர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என்னென்னவோ செய்து பார்த்தார் முடியவில்லை. கடைசியில் 99 ரன்கள் எடுத்த நிலையில்தான் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தை அடித்து நொறுக்க எத்தனித்தபோது தேவையில்லாமல் அவுட்டானார் கெய்ல். அந்த அவுட்டை அவர் எதிர்பார்க்கவில்லை.
பொறி பறந்து போச்சு
பந்து பறந்திருக்கும் என்று எதிர்பார்த்து ரன் எடுக்க எத்தனித்த அவர் பிறகுதான் தான் அவுட்டானதை உணர்ந்தார். வந்த கோபத்தில் அப்படியே பேட்டை தூக்கி அடித்தார் பாருங்க.. அது பறந்து போய் அந்தாண்டை விழுந்தது. மறு முனையில் இருந்த மேக்ஸ்வெல் அப்படியே திகிலடித்துப் போய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏன்.. ஆர்ச்சரே கூட சற்று பயந்து போய் விட்டார்.
நல்ல ஆட்டம்
இருந்தாலும் ஆர்ச்சருக்கு கெய்ல் கை கொடுத்து விட்டு அமைதியாக பெவிலியன் நோக்கி நடந்தார். அவர் விசிறியடித்த பேட்டை மேக்ஸ்வெல் கொண்டு வந்து கையில் கொடுத்தார். கடும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய கெய்லுக்கு பஞ்சாப் அணியினர் சூப்பர் வரவேற்பு கொடுத்தனர். சும்மா சொல்லக் கூடாது.. இதுதான் அவரது பெஸ்ட் ஆட்டம்.
1000 சிக்ஸர்
அணியின் ஸ்கோரை மட்டுமே மனதில் வைத்து அற்புதமாக ஆடினார் கெய்ல். ஸ்லோ பால், க்விக் டெலிவரி என எதையும் விடவில்லை அவர். பந்தை பவுண்டரிக்கும், அதைத் தாண்டியும் துரத்துவதிலேயே அவர் கவனமாக இருந்தார். மிகச் சிறப்பாக ஆடிய அவர் இன்று டி 20 போட்டிகளில் தனது 1000மாவது சிக்ஸரையும் விளாசி புதிய சாதனை படைத்தார். இன்றைய போட்டியில் அவர் 8 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
வேர்ல்ட பாஸ் மட்டுமல்ல.. கிரிக்கெட்டுக்கே தான் பாஸ் என்பதை இன்று கெய்ல நிரூபித்து விட்டார்.. !