மோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அபுதாபி: ஜம்மு காஷ்மீரில், 'முஸ்லீம் இன அழிப்பில்' ஈடுபடுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நாட்டின் உயரிய விருதை இன்று வழங்கி கவுரவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும், ஐக்கிய அரபு அமீரகம் மோடிக்கு வழங்கியுள்ள இந்த விருது, பாகிஸ்தானின் எந்த ஒரு குற்றச்சாட்டையும் பெரும்பான்மை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதன் பிரதிபலிப்பு என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃ சையது' என்ற இந்த விருது மோடிக்கு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது தான். ஆனாலும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, இந்தியா ரத்து செய்த பிறகு, அங்கு முஸ்லிம்களை இந்திய அரசு இன அழிப்பு செய்ய உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
இஸ்லாமிய நாடுகள்
பாகிஸ்தானின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, மோடிக்கு இன்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தி உள்ளது. ஒருவகையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் இல்லை என்ற சமிக்ஞையை இது வழங்கியுள்ளது.
ஆதரவு அளித்த ஐக்கிய அரபு அமீரகம்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை, இந்தியா ரத்து செய்த மறுநாளே, இந்தியாவின் முடிவுக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் நாடுகளில் முக்கியமானது ஐக்கிய அரபு அமீரகம் தான். அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பளிச்சென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஒரே நிலைப்பாடு
தற்போது, பாகிஸ்தான் என்னதான் இந்தியா மீது விதவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தாலும் கூட, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இந்த விருது நிகழ்வின் மூலமாக நிரூபித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
முக்கிய தலைவர்கள்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவை மேம்படுத்துவதற்காக இந்த விருதை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்ற முக்கியமான உலக தலைவர்களுக்கு இதற்கு முன்பாக இந்த விருதை வழங்கி கவுரவித்து இருந்தது ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.