ஆரம்பமே சரவெடி.. பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் பதுங்கி பாய்ந்த சிஎஸ்கே.. மும்பையை வீழ்த்திய தோனி படை
அபுதாபி: சிங்கம் ஸ்டைல் மீசையுடன் தோனி.. சியர் லீடர்சே இல்லாத முதல் ஐபிஎல்.., ஆடியன்ஸ் வாய்சுக்கு பதிலாக செயற்கை பிஜிஎம் என்று இதுவரை கண்டிறாத அனுபவத்துடன் இந்தாண்டு ஐபிஎல் முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
போதாத குறைக்கு 14 மாதங்கள் பிறகு தோனி களத்தில் இறங்கினார். இத்தனை சிக்கல்களுக்கு இடையே, பலம் வாய்ந்த மும்பை இந்தியன்சை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கடந்த ஐபிஎல் தொடர் பைனலில், கடைசி வரை மும்பையிடம் போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோற்று கப் வெல்லும் வாய்ப்பை இழந்த அடிபட்ட சிங்கமாக களம் கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அட கடவுளே.. ரோஹித்துக்கு இப்படி ஒரு ராசியா.. வரிசையா அடிமேல அடி வாங்கியிருக்காங்களே!
கேப்டன் கூல்
பிராவோ இல்லை, ஹர்பஜன் இல்லை, ரெய்னா இல்லை.. இப்படி எத்தனையோ இல்லை, இல்லைகள் இருந்தன. ஆனால், அத்தனைக்கும் ஈடுகட்ட மறுமுனையில் ஒருவர் இருந்தார். அவர்தான் தோனி. கேப்டன் கூல்.
ஆரம்பம் அதிரடி
ஆரம்பத்தில் மும்பை என்னவோ ஆரவாரமாகத்தான் பேட்டிங்கை தொடங்கியது. நாலாபுறமும் அடித்து நொறுக்கினர் பேட்ஸ்மேன்கள். 4 ஓவர்களில் 40 ரன்களை கடந்து அச்சுறுத்தியது ரோஹித், டி காக் ஓப்பனிங் ஜோடி.
கிண்டல்கள்
அதற்குள்ளாக, 4 பவுலர்களை மாற்றிவிட்டார் தோனி என்று எள்ளி நகையாடினர் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள். ஆனால், புலி பதுங்குவதை பார்த்து எக்காளமிட்டால் நட்டம் யாருக்கு? தோனியின் திரிசூல வியூகம் பற்றி அறியாமல் பேசுவோருக்கும் அதுதான் கதி. ஆம்.. லெக் ஸ்பின்னில் எப்போதுமே திணறும் ரோகித் இப்போதும் வீழ்ந்தார், சாவ்லா பந்தில்.
அபார சாவ்லா
அதிக தொகை கொடுத்து சாவ்லாவை வாங்கியதன் பலனை அறுவடை செய்தது சென்னை. 2 ரன்கள்தான் சேர்த்திருப்பார்கள் டிகாக்கை வழியனுப்பி வைத்தார், 'குட்டிப்பையன்' சாம் கர்ரன். 48 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது மும்பை. சூர்யகுமார் யாதவ், சுரப் திவாரி என இரு இந்திய வீரர்களும் குட்டி பார்ட்னர்ஷிப் போட்டனர். ஆனால், ஆரம்பத்தில் ரன்களை அள்ளிக் கொடுத்த சகர், 'ஐ யம் பேக்' என்று சொல்லி கம்பேக் கொடுத்து, சூர்யகுமாரை வழியனுப்பினார். ரன் அப்போது 92. ஓவர்கள் 10. ஆனால் பிறகுதான் விஸ்வரூபம் எடுத்தனர் சிஎஸ்கே பவுலர்கள். நடுவில் ஹர்திக் பாண்டியாவும், பொல்லார்டும் கொஞ்சம் பயம் காட்டினர். ஆனால் அவர்களையும் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைத்து, 20 ஓவர்களில் 162 ரன்களில் மடக்கிப் போட்டது தோனி படை.
தோனி வியூகம்
ஓப்பனிங்கில் இருந்து டெய்ல் வரை பெரும் அதிரடி வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்சை இந்த அளவுக்கு மடக்கிப்போட்டதில் தோனி பவுலர்களை பயன்படுத்திய விதம் ஒரு காரணம். ஆரம்பத்தில் வழக்கம் போல ரன் கொடுத்தாலும், 'லுங்கி' கொடுத்த கம்பேக்கில் ஆடிப்போனது ரோஹித் டீம். அதிகப்படியாக 3 விக்கெட்டுகளை அள்ளி பாக்கெட்டில் போட்டார்.
கலக்கிய சிஎஸ்கே
பார்ம் இஸ் டெம்ப்ரவரி.. கிளாஸ் இஸ் பெர்மனன்ட் என்பது கிரிக்கெட்டில் அதிகம் புழங்கும் சொலவடை. தோனிக்கு அது ரொம்பவே பொருந்தும். 14 மாதம் கழித்தாலும், நான் ராஜாதான் என காட்டிவிட்டார் தோனி. இது முதல் பாதியில் நடந்த கதை. இரண்டாம் பாதியில் பேட்டிங்கை சிஎஸ்கே ஆரம்பித்தபோதும் மும்பை இந்தியன்ஸ் கைதான் ஓங்கியிருந்தது. முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும், அடுத்தடுத்து நடையைக் கட்டினர். அதிலும் 7 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்து, அவுட் இல்லை என்று மறுமுனையில் நின்ற பேட்ஸ்மேன் சொல்லியும், டிஆர்எஸ் கேட்காமல், எல்பிடபிள்யூதான் என்று நினைத்து விஜய் நடையைக் கட்டியதெல்லாம் வேற ரகம்.
ராயுடு கலக்கல்
இருப்பினும் ஆட்டத்தை திருப்பியது, டுப்ளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடிதான். நாம வளர்த்த கிடா மார்பில் பாயுதேன்னு மும்பை இந்தியன்ஸ் பேன்ஸ் கதறும் அளவுக்கு அடி வெளுத்துவிட்டார் ராயுடு. ஆனால் கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் நெருக்கடி கொடுக்க, அடித்தாட வேண்டிய நிலையில், ராகுல் சகாரின் அருமையான ஒரு கேட்சில் அவுட்டானார் ராயுடு. இந்த ஐபிஎல் தொடரின் முதல் அரை செஞ்சுரி ராயுவுடையதுதான். 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்களை விளாசியபோதிலும், எதிர்பாராமல் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார்.
கலக்கிய கர்ரன்
தோனி இறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில், இதுக்கு நான் எதற்கு, என் சிஷ்யனே போதும் என்பதை போல கர்ரனை களமிறக்கிவிட்டார் கேப்டன் கூல். அவரும் வந்ததும் வராததுமாக அதிரடி காட்டி சிக்சரும், பவுண்டரியும் பறக்கவிட்டார். அதுவும் பும்ரா பந்தில் லெக் திசையில் அடித்த சிக்சர் வேறு ரகம். ஆனால் தேவையில்லாமல் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று, வம்பில் சிக்கி அவுட்டாகிவிட்டார். முக்கியமான இறுதிகட்ட நேரத்தில், வெறும் 8 பந்துகளில் அவர் அடித்த 18 ரன்கள், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்ததை போல இருந்தது.
கடைசி ஓவர் த்ரில்லர்
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட டிரென்ட் பவுல்டின் முதல் பந்தில் பவுண்டரி விளாசினார் டுப்ளசிஸ். அனுபவ வீரர்கள் என்பதை நங்கூரம் போட்டு நிரூபித்தார். அடுத்த பந்திலேயே அடுத்ததாக ஒரு பவுண்டரி விளாசி, வெற்றி இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்சின் ராசியே, யார் எப்போது பார்முக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாததுதான். இந்த போட்டியிலும் அதை நிரூபித்துக் காட்டிவிட்டது சிஎஸ்கே. கூலாக ஆடி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இனி சரவெடிக்கு பஞ்சம் இருக்காது.