திருந்திவிட்டதா சவுதி அரேபியா? குறையும் மரண தண்டனைகள்; ஹீரோவாகும் இளவரசர்
ரியாத்: இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2020ம் ஆண்டு மிகக் குறைந்த அளவிலேயே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மரண தண்டனை என்றாலே நம் நினைவுக்கு வரும் நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. 'பேச்சுக்கே இடமில்ல; ஸ்ட்ரெய்ட்டா வீச்சு தான்' ஃபார்முலாவை அவர்கள் பல்லாண்டு காலமாக பிசிறில்லாமல் ஃபாலோ செய்து வருகின்றனர்.
எனினும், கடந்த ஆண்டு அங்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் எண்ணிக்கை வியப்பளிக்கும் வகையில் குறைந்திருக்கிறது. வன்முறை இல்லா போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைகளை நிறுத்தியதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு 27 மரணதண்டனைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக சவுதி அரசின் மனித உரிமைகள் ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இதே சவுதி அரேபியாவில், முந்தைய ஆண்டான 2019ல் 184 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை இதுதான். இவ்விரண்டு ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், 2020-ல் 85 சதவீதம் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரண தண்டனைகள் குறைக்கப்பட்டதே இந்த பெரும் மாற்றத்திற்கு காரணம் என சவுதி மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த பெரும் மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணம், 34 வயதான இளவரசர் முகமது பின் சல்மான் தான்.
சவுதி அரேபியாவை நவீனமயமாக்குவதற்கும், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், பொருளாதாரத்தை சீரமைப்பதற்குமான ஒரு முயற்சியாக இளவரசர் இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, அங்கு சாதாரண குற்றங்களுக்குக் கூட மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
Amnesty அறிக்கையின் படி, 2019ல் அதிக மரண தண்டனை நிறைவேற்றியதில் சவுதி 3வது இடத்தில் உள்ளது. சில ஆயிரங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி சீனாவும், ஈரானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைப்படி, கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஐந்து மரணதண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. அதுவும், இவை அனைத்தும் 2020 ஜனவரியில் நடந்தேறியவை என்பது குறிப்பிடத்தக்கது.